தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் கடந்த சில மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாததால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.
தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், 2014- 15ல் 4.36 லட்சம் ரூபாயில் நவபாஷாண கடற்கரை வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.இதனால் இரவில் வரும் பெண் பக்தர்கள் அச்சமின்றி அப்பகுதியில் கோயில் மற்றும் உடை மாற்றும் அறைகளுக்கு சென்று வந்தனர். கடந்த சில மாதங்களாக ஹைமாஸ் எரியாததால் நவபாஷாண கடற்கரை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
இதனால், நவபாஷாணம் வரும் பக்தர்கள் அச்சத்துடன் கடற்கரைக்கு சென்று வரும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் இந்த ஹைமாஸ் விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தினர்.