கங்கைக்கரையில் உள்ள காசியைப் போன்று பாகீரதி நதியின் வடகரையில் உள்ளது உத்தரகாசி இங்கும் விஸ்வநாதர் பெரிய வடிவில் லிங்கத் திருமேனியுடன் கோயில் கொண்டிருக்கிறார். இதன் அருகில் உள்ள பராசக்தி கோயிலில் ஒரு பெரிய திரிசூலம் நிறுவப்பட்டுள்ளது. தனித்துவமான உலோகக் கலவையால் இதனை வார்த்து நட்டுள்ளார்கள். 8 மீட்டர் உயரம் 2.74 மீட்டர் அகலம் 1 1/2 மீட்டர் சுற்றளவு கொண்டது. பிரமாண்டமான இந்த திரிசூலம் சிவப்புப் பட்டுத் துணியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இதன் அடியில் சற்றே தொட்டால் மேல்பகுதிவரை அசைந்தாடும் விந்தையை நேரில்தான் கண்டுகளிக்கவேண்டும். இந்தத் திரிசூலத்திற்கு அருகே அணையா விளக்கு ஒன்றுள்ளது. இது 400 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதாம். ஆதிசங்கரர் இங்கு வந்த போது யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.