பகவத் ஸ்ரீராமாநுஜரின் 1000-வது ஆண்டு நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் உள்ள ஜருகு மலை அடிவாரத்தில், ஸ்ரீராமாநுஜருக்கு மிக அற்புதமாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழிலார்ந்த பகுதியில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், ஆறு கோடி ரூபாய் மதிப்பில் 10,000 சதுர அடியில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் காணப்படும் கோயில்களின் அமைப்பில் கலை நயத்துடன் கூடிய மணிமண்டபத்தில், பத்து அடி பீடத்தில் பதினெட்டு அடி உயரத்தில் ஸ்ரீராமாநுஜர் சிலைல பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. மணிமண்டபத்தின் சுவர்களில் ராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் ஓவியங்களும், சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மணிமண்டபச் சிறப்பு: மணிமண்டபத்தைச் சுற்றிலும் காஞ்சி வரதராஜர், திருநாராயணபுரம் சம்பத் குமாரன், திருப்பதி வேங்கடவன், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. மணிமண்டபத்தில் உள்ள திரையரங்கத்தில் ஸ்ரீராமாநுஜர் வாழ்க்கை வரலாறு, அவரது கோட்பாடுகளை விவரிக்கும் காட்சிகள் போன்றவை திரையிடப்பட உள்ளன. மேலும், இந்த மணிமண்டபத்தில் நூலகங்கள், அரங்குகள் வெளியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா போன்ற வசதிகளும் இருப்பது சிறப்பு. மணிமண்டபம் காலை 7 முதல் மதியம் 12 வரை; மாலை 4 முதல் 7 வரை திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உள்ள எருமாபாளையம் பிரிவு ரோட்டில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் மணிமண்டபம் உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.