நமது புனித -யாத்திரைகளுள் சிறந்ததாகக் கருதப்படும் அமர்நாத் யாத்திரை செல்லுவதே கடினம். பக்தியும், தீவிர ஆர்வமும் இருப்பவர்களே இதனை மேற்கொள்கிறார்கள். பிரம்மாண்டமாய், அகண்ட வாயைத் திறந்தது போன்ற குகையில் பனிலிங்கத்தைத் தரிசிப்பதே பேரானந்த அனுபவம். ஆனால் அதனை அடைய எத்தனையோ சிரமங்கள். இவை இயற்கை தருபவை. ஆனால் மனிதர்கள் மதம் என்ற பெயரில் செயற்கைத் தடைகளை ஏற்படுத்தி பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் நடுங்கச் செய்வது மிகவும் வருந்தத்தக்கது. இம்முறை அமர்நாத் யாத்திரை சென்றிருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். நம்முடைய புனித பாரதமும், சனாதன தர்மமும் நல்ல முறையில் வளர்ந்து அமைதியும், நிம்மதியும் நிலவ இறைவனை ப்ரார்த்திப்போம்.
யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே ச்ரத்ததானா மத்பரமா பக்தாஸ்தேஸதீவ மே ப்ரியா:
(சிரத்தையுடைய எவ் அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத்தர்மத்தை ஈண்டுரைத்தப்படி கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே எனக்கு மிகவும்மினியவர்.)
பக்தியில் வைதிக பக்தி என்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தைப் பல தடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய ராக பக்தியைப் பெறக்கூடும்.