பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் 20ம் ஆண்டாக திருஞான சம்பந்தர் குருபூஜை இசைவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்று, இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். திருஞான சம்பந்தர் குருபூஜை இசைவிழா, நேற்று ஆர்.பொன்னாபுரம் பொன்முத்து மாரியம்மன் கோவிலில் காலை 9:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை நடைபெற்றது. விழாவில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த இசைக்கலைஞர்கள் பலரும் பங்கேற்று பாடினர். அத்துடன், பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் ரீதியான கர்நாடக இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர். திருமுறை பண்ணிசை பாடப்பட்டது. காஸ்யப் மகேஷ் உள்ளிட்ட காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியின் அமைப்பாளர் தர்மராஜ் கூறுகையில், ”பொள்ளாச்சி பகுதி கர்நாடக இசைக்கலைஞர்கள் சார்பில், திருஞான சம்பந்தர் நினைவாக, இசைக்கும், இறைவனுக்கும் செய்யும் தொண்டாக 20 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்,” என்றார்.