பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
10:06
பெ.நா.பாளையம்: கோவை அருகே எலி, பூனையை பானைக்குள் அடைத்து வழிபடும் வினோத திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் கவுண்டம்பாளையம் உள்ளது. இங்குள்ள மகா மாரியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், பிரமாண்ட திருவிழா கடந்த மே , 15ல் பூச்சாட்டுடன் துவங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்வாக மருந்து வைத்தல், எருது கட்டுதல், வழிபடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், ஒரே பானைக்குள், கருப்பு நிற பூனையும் எலியும் வைத்து வழிபடும் சிறப்பு பூஜை நடந்தன. கோவில் வளாகத்தில் தாரை , தப்பட்டைகள் முழங்க, பூனை, எலியை பானைக்குள் வைத்து, காற்று புகும் அளவு துளையுள்ள மூடியால் மூடினர். கோவில் முன், இரண்டு அடி ஆழமுள்ள குழியில் பானை வைக்கப்பட்டு, மூங்கில் படல் கொண்டு மூடினர். நாயக்கன்பாளையம், கோவனுார், கூ.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த எருதுகள் ஊர்வலமாக கோவிலைச்சுற்றி வலம் வந்து, மூங்கில் படலை கடந்தன. பின், மறைவான இடத்திற்கு பானையை எடுத்துச்சென்று திறந்தனர். அப்போது பூனையும், எலியும் துள்ளிக்குதித்து ஓடின. இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பூனையால் எலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், இவ்வுலகில் அனைத்து தரப்பு மக்களும் எதிரிகளால் தொல்லை இன்றி வாழ்வர் என்பது ஐதீகம்’ என்றார்.