பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
12:06
உளுந்துார்பேட்டை: எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா தேரோட்டம், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, எறையூரில் உள்ள பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. பங்கு தந்தை ஆல்பர்ட், முன்னாள் பங்கு தந்தை ரொசாரியோ, கொடியினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். நேற்று முன்தினம் காலை திருப்பலி நிகழ்ச்சியும், இரவு ஆடம்பர தேர்பவனியும் நடந்தது. தேரோட்டத்தில் முதல் தேராக லுார்துஅன்னையும், இரண்டாவது தேரில் அந்தோணியாரும், 3வது தேரில் குழந்தைதெரசம்மாள், 4வது தேரில் ஜெபமாலை அன்னை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை காரியஸ்தர்கள், முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் பள்ளி முதல்வர் தேவதாஸ், லுார்துஜெயராஜ், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேரோட்டத்தின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இரு தரப்பினரின் சமரச முயற்சியால், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, தேரோட்டம் நடந்தது. முன்னதாக எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.