சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 10:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடந்துவரும் இத்திருவிழாவின் 5ம் நாளன்று திருக்கல்யாணமும், 6ம் நாளன்று கழுவன் திருவிழாவும் நடந்தது. 9 ம் நாளான நேற்று ஜூன் 5ம் தேதி வைகாசி விசாகத்தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி காலை 9:30 மணிக்கு ரத பூஜை செய்யப்பட்டு பூரணை, புட்கலை தேவிமார்களுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு சிங்கம்புணரி நாட்டார்கள் சந்திவீரன் கூடத்திலிருந்து ஊர்வலமாக தேரடி வீதிக்கு வந்தனர். தொடர்ந்து 4:20 மணிக்கு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் பவனிவந்த போது 5:00 மணிக்கு மேகங்கள் கறுத்து மழை பெய்யத்தொடங்கியது. இதனால் கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் தேர் இழுத்தனர். 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்ததும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி 2 மணி நேரம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்பு சார்பில் அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தேரடி பூஜை நடத்தப்பட்டது. இன்று ஜூன் 6ம் தேதி இரவு பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.