பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
11:06
காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வருகை தருவர் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதியம், 12:05 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்ததால், வெயிலுக்கு பயந்து, வீட்டில் முடங்கியதால், பக்தர்கள் கூட்டமின்றி, சம்பிரதாயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் கைலாசநாதர் கோவில், கலை சின்னமாக விளங்கி வருகிறது. இங்குள்ள நுாற்றுக்கணக்கான மணல் சிற்பங்கள் காண்போரை கவர்கின்றன.நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில் இன்னும் அந்த காலத்து வரலாற்றை சிறப்பித்து கொண்டிருக்கிறது.
இந்த கோவிலில், இதற்கு முன், 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம், 12:05 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்ததால், தகிக்கும் வெயிலுக்கு பயந்து, பலர் வீட்டிலேயே முடங்கினர். வந்த சிலரும், தாங்க முடியாத வெயிலால் கடும் அவதி அடைந்தனர். கோவில் வளாகத்தில் இருந்த மர நிழலில் பலர் தஞ்சம் அடைந்தனர். கோவில் உள் பகுதி யில், வெயிலுக்கு நிற்க வசதியாக, தரை விரிப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கை மக்கள் மட்டுமே உள்பகுதியிலும் மேல் தளத்திலும் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு கழிப்பறை எந்த பக்கம் இருக்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு, அறிவிப்பு பலகையின்றி, ஓரத்தில் இருந்தது. குறிப்பாக, கழிப்பறையில், ஆண், பெண் என்ற அறிவிப்பு கூட ஒட்டப்படவில்லை.