பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
11:06
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று, இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை நிகழ்ச்சிகள் நடந்தன. விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன் ஆகியோர், 63 நாயன்மார்களுக்கு எழுந்தருளி, காட்சியளித்தனர். மலர் அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார். பஞ்ச வாத்யங்கள், வான வேடிக்கை, மின் அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், சுவாமிகள் எழுந்தருளி, தேர் வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று மாலை, விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் , திருக்கல்யாண உற்சவமும், நாளை அதிகாலை, மகா அபிஷேகம் மற்றும் சுவாமிகள் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.