வறண்ட குன்றத்து தெப்பம், லட்சுமி தீர்த்தகுளம்:நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 11:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளம், ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்தில், மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் போல் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருக்குளம் எனும் லட்சுமி தீர்த்த குளம் மழை பெய்தால் மட்டும் நிரம்பும். மழையின்றி இரண்டு ஆண்டுகளாக குளம் வறண்டு கிடப்பதால் பக்தர்கள் குளத்தை பார்த்துவிட்டு மிகுந்த வேதனையுடன் செல்கின்றனர். தெப்பக்குளம் தண்ணீரில் கோயில் சார்பில் தை மாதம் மிதவை தெப்பம் அமைத்து சுவாமி, தெய்வானை எழுந்தருள தெப்பத்திருவிழா நடக்கும். 2015, 2017ம் ஆண்டு வறட்சியால், தெப்பம் சுற்றிவரும் அளவிற்கு ஆழ்குழாயிலிருந்து தண்ணீர் நிரப்ப முடியவில்லை. அதனால் இரண்டு ஆண்டுகள் நிலை தெப்பத்திருவிழாவாக நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
தெப்பக்குளத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்க பணிகள் மேற்கொள்வதாக சில ஆண்டுகளுக்கு முன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் பணிகள் துவங்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தெப்பக்குளம், திருக்குளத்தில் நவீன தொழில் நுட்பத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.