கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2017 05:06
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நிறைவு பெற்று வருகிறது. டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் கட்ட கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் வழங்கியது. 2013 ஜூன் நான்காம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கடல் காற்றில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணலின் உறுதி தன்மை பற்றியும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இங்கு மண்ணின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் இவர்களின் பரிந்துரையின் பேரில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் கட்டுமானத்தில் கடை பிடிக்கப்பட்டது. உப்புக்காற்று பாதிக்காமல் இருக்க தனியாக தயாரிக்கப்பட்ட சிமின்ட் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2014 டிசம்பர் ஏழாம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அன்னதான மண்டபம், சீனிவாச கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம் போன்றவை கீழ் தளத்தில் நிறைவு பெற்றுள்ளது. வெங்கடாஜலபதி , பத்மாவதி தாயார் சன்னதிகள் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் நடக்கும் செப்., ஒன்றாம் தேதி பகல் 12.18 மணிக்கு சூரிய ஒளி வெங்கடாஜலபதி மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையிலும், இதுபோல தினமும் சூரியன் உதிக்கும் போது மூலஸ்தானத்தில் ஒளி விழும் வகையிலும் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.