பழநி உலகநலன் மற்றும் மழைவேண்டி பழநி முருகன் கோயில், உபகோயில்களில் ஜூலை 7 முதல் 10 வரை அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. ஜூலை 7ல் பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் சங்கு பூஜை நடக்கிறது. அதில் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் சங்குகளில் நிரப்பப்படும். தங்கச்சப்பரத்தில் கலசங்கள் வைத்து, சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடக்கிறது. உச்சிக்காலத்தில் சங்காபிஷேகம், மூலவருக்கு அன்னம் கிரீடமாக சூட்டுதல் நடக்கும். பின், வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதங்களில் படைக்கப்படும். ஜூலை 8ல் பவுர்ணமி அன்று திருஆவினன்குடி கோயிலில் மாலை 5:30 மணிக்கு அன்னாபிஷேகம், அருணகிரிநாதர் விழா நடக்கிறது. ஜூலை 9ல் பெரியநாயகியம்மன் கோயிலில் சாயரட்சை பூஜையில் பெரியநாயகியம்மன், சிவன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 10ல் சண்முக நதிக்கரையிலுள்ள பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.