பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
12:07
காஞ்சிபுரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பருவ மழை பொய்த்துப் போயுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, அடுத்த மாதம் 25ல், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில், இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இரு மாதங்களுக்கு முன்பே துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில், 15 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள, ஆர்.கண்ணன் கூறியதாவது: என் மனைவி, கல்லுாரியில் படிக்கும் மகன், மகளின் ஒத்துழைப்புடன் இத்தொழிலை செய்கிறேன். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளபடி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தவிர்த்து, பேப்பர் மற்றும் கிழங்கு மாவு கூழ் கொண்டு, விநாயகர் சிலையின், பாகங்களை அச்சில் வார்த்து வெயிலில் காய வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. பின், பாகங்களை இணைப்போம்.
விநாயகர் சதுர்த்தி நெருக்கத்தில், சிலைக்கு வர்ணம் பூசுவோம். 4 முதல், 10 அடி வரை, சிங்க வாகனம், மூஞ்சுறு, ரிஷப வாகனம், ஆஞ்சநேயர், சிவலிங்கத்தின் மீது விநாயகர், பாகுபலி என, பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கிறோம். நடப்பாண்டு, புதிதாக பிரதோஷ விநாயகர் தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், சென்னை, வேலுார், ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கிறோம். புதிதாக ஆர்டர் கொடுக்கவும் வாடிக்கையாளர்கள் வரத்துவங்கியுள்ளனர். இவ்வாறு ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு: கடந்த ஆண்டு, பருவ மழை பொய்த்ததால், விநாயகர் சிலை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மரவள்ளி கிழங்கு போதுமான விளைச்சல் இல்லை. இதனால், ஒரு மூட்டை கிழங்கு மாவு, 800க்கு விற்கப்பட்டது. தற்போது, 1,600 ரூபாய்க்கு விற்கிறது. அதுபோல, சிலைக்குள், பிடிமானத்திற்காக தைல மர கம்புகள் வைப்போம். கடந்த ஆண்டு, ஒரு டன், 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 3,600க்கு விற்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரியால், பெயின்ட் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கூடுதல் விலைக்கு விற்றால் தான் நஷ்டம் இல்லாமல் இருக்கும். வெளியூர்களில் இருந்து வரும், வாடிக்கையாளர்கள், விநாயகர் சிலையை எடுத்துச்செல்ல, வாடகைக்கு வாகனங்களை எடுத்து வருகின்றனர். வாகன செலவும் இருப்பதால், விலையை குறைத்து கொடுங்கள் என கேட்கின்றனர். தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால், நடப்பு ஆண்டு, விநாயகர் சிலையின் விலையையும் உயர்த்த வேண்டி யுள்ளது என்கின்றனர், விநாயகர் சிலை தயாரிப்போர். - நமது நிருபர் -