பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
11:07
பட்டாபிராம்: பட்டாபிராம் வழியாக செல்லும் கூவம் ஆற்றில், கருமாரியம்மன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. பட்டாபிராம், தண்டுரை அருகே அணைக்கட்டுசேரி பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக செல்லும் கூவம் ஆறு, நீர் வரத்து இல்லாததால் வறண்டு போய் காணப்படுகிறது.அதனால், ஞாயிற்றுக்கிழமையான, நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், அப்பகுதி இளைஞர்கள், கூவம் ஆற்றில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, ஆற்று மணலில், 1.5 அடி உயரமுள்ள கருமாரியம்மன் சிலை புதைந்திருந்தது, இளைஞர்களுக்கு தெரியவந்தது. அவர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர், பட்டாபிராம் காவல் நிலையத்தில், அந்த சிலையை ஒப்படைத்தார். சிலைக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை; எனவே, போலீசார் அந்த சிலையை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.