துாத்துக்குடி: துாத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழா நாளை (26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. துாத்துக்குடி, துாய பனிமய மாதா ஆலய விழா நாளை துவங்கி ஆக.5-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை கொடி பவனி நடக்கிறது. நாளை 26ம் தேதி காலை 8:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. முன்னதாக துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மதியம் 12:00 மணி அளவில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது. 5ம் நாள் திருவிழாவான, ஜூலை 30ம் தேதி காலை 7:30 மணிக்கு புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடக்கிறது. காலை 11:00 மணிக்கு எர்ணாகுளம் பிஷப் ஜோஸ் புதின் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆக., 4ம் தேதி இரவு 9:00 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆக., 5ம் தேதி நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு முதல் திருப்பலியும், 5:30மணிக்கு 2ம் திருப்பலியும், 7:30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.