திருநள்ளாறு, குச்சனுாரில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
07
மார் 2026 08:03
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ் வரர் கோவிலில், சனீஸ்வரர், தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். சனீஸ்வரர் நேற்று காலை, 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனையொட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு, சனீஸ்வரருக்கு பால், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் உள்ளிட்ட 32 திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சனி பகவானுக்கு வைர அங்கி கவசம் அணிவித்து, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டது. காலை, 8.24 மணிக்கு மங்களவாத்தியங்கள் முழங்க, மகா தீபாராதனையுடன் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.பின், வசந்த மண்டபத்தில் தங்க காகம் வாகனத்தில் சனிபகவானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோவிலில் குவிந்த பக்தர்கள், தோஷங்கள் நீங்க வேண்டி நேர்த்திக்கடனாகமொட்டை அடித்தும், கோவிலின் எதிரில் உள்ள நளன் குளத்தில் நீராடி, கலி தீர்த்த விநாயகரை வணங்கி, சிதர் தேங்காய் உடைத்து சுவாமியை வணங்கினர்.புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன், தருமை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே போல, தேனி மாவட் டம், குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இங்கு சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள் ளார். மூலவருக்கு அருகில் உற்சவர் உள்ளார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சனீஸ்வரருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடனும் காட்சியளிக்கிறார். சனிப்பெயர்ச்சியை முன் னிட்டு, மார்ச் 3 முதல் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தீபன், அறநிலைய துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
|