பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் வட்டாரத்தில், அவ்லாளபுரம் உலகேஸ்வர ஸ்வாமி கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், சித்தம்பலம் நவகிரக கோட்டை, வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சனிப்பெயர்ச்சி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு வேள்வி வழிபாடுகள், அபிஷேக அலங்கார பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன. வெங்கிட்டபுரம் அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகுரு சுவாமிகள் பேசுகையில், சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். சனிபகவான் தற்போது சண்டை போடும் இடத்திலும், சகாயம் செய்யும் இடத்திலும் இல்லை. இரண்டுக்கும் நடுவே உள்ளார். சனி பகவானைக் கண்டு அனைவரும் அச்சப்படுகின்றனர். அவ்வாறு , யாரும் அச்சப்பட தேவையில்லை. எது நல்லது எது கெட்டது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே சனி பகவான் அவ்வாறு சோதனைகளை செய்கிறார். பகுத்தறிவை பயன்படுத்தி எது நல்லது கெட்டது என்பதை யோசித்து செய்ய வேண்டும். இதற்காகவே, ஆடு மாடுகளைப் போன்று இல்லாமல், இறைவன் நமக்கு பகுத்தறிவை கொடுத்துள்ளார். மனிதர்கள் உயர்ந்த எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, நம்மை உயரமாகவும், இதர உயிரினங்களை நீளமாகவும் இறைவன் படைத்துள்ளார். நமது நிழல் நம்முடன் தான் வரும். அதுபோல், நாம் செய்த பாவ புண்ணியங்களும் நம்முடனே வரும். எனவே, நல்லது எது தீயது எது என நாமே அறிந்து, பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.