பதிவு செய்த நாள்
07
மார்
2026
08:03
திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஆதி ரத்தினேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தினமலர் ஆன்மிக மலர் படத்தை வைத்து வழிபாடு நடந்தது.
நவக்கிரகங்களில் முதன்மையானவர் சனீஸ்வரர். நேற்று கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். திருவாடானை மங்களநாதன் குளம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். கோயிலில் தினமலர் ஆன்மிக மலரில் வெளியான சனி பகவான் படத்தை வைத்து, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டன. சிவாச்சாரியார் ரமணன் முன்னின்று நடத்தினார். தினமலர் ஆன்மிகமலரில் சனிபகவான் படம் மிகவும் தத்ரூபமாகவும், தெய்வீகக் கலை நயத்துடனும் இருப்பதால் அதனை பூஜையில் வைத்து வழிபடுவது மிகுந்த மனநிறைவை தருகிறது என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவான் சன்னதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சனி பகவானுக்கு பால், தயிர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிவாச்சாரியார் ரவி செய்திருந்தார். பரிகார ராசிக்காரர்கள் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனீஸ்வரர் வெள்ளி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
*சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு யாக கேள்விகள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாயல்குடி மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் சனீஸ்வர பகவான் சன்னதியில் ஹோம வேள்வி வளர்க்கப்பட்டு பரிகார ராசிக்காரர்கள் சங்கல்ப பூஜையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் கைலாசநாதர் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சுவாமி சன்னதி அருகே உள்ள சனீஸ்வர பகவானுக்கு காலை 11 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
* பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சனிப்பெயர்ச்சி மகாயாகம் நடந்தது. மார்ச் 5 முதல் மாலை 6:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், நவகிரக கலச ஸ்தாபனம் நடந்தது. பின்னர் ஹோமம், பூர்ணாகுதி நிறைவடைந்தது.
நேற்று காலை 6:00 மணி துவங்கி 2ம் காலையாக பூஜை, நீலாதேவி சனீஸ்வரர், சூரிய சக்த நவக்கிரக சாந்தி ஹோமம், 13 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சனீஸ்வரன் ராஜ அலங்காரத்தில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னதியில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜையில் பக்தர்கள் ஈடுபட்டனர்.