பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
02:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கூடை கூடையாய் பூக்களை அம்மனுக்கு சாத்தி, வழிபாடு நடத்தினர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கிய பின்னரே, மற்ற மாரியம்மன் கோவில்களில் விழா நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கோவில் திருப்பணி காரணமாக, கருவறையில் இருந்த அம்மன் பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வரும் வேளையில், திருவிழா நடப்பதே கேள்விக்குறியாக இருந்தது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எளிமையான முறையில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான பூச்சாட்டுதல் வழிபாடு நேற்று நடந்தது. கிச்சிபாளையம் நடராஜர் பஜனை மடத்திலிருந்து, பக்தர்கள் பூக்களை கூடை கூடையாய் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பாலாலயம் செய்யப்பட்டிருந்த அம்மன் மீது, பூக்களை சாத்தி, வழிபாடு நடத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசித்தனர். சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும், ஆக.,7ல், சக்தி அழைப்பு, 9, 10, 11ல் பொங்கல் வைபவம், ஆக., 15ல் பால்குட விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.