மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் தேர் வீதியுலா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்தேர் உற்சவத்தில், திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா என, ஆடிப்பூரம் களைகட்டியது. உற்சவத்தின் உச்ச கட்டமாக நேற்று முன்தினம், திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் பிரம்மோற்சவ தேர் பவனிக்கு அடுத்த, பிரபலமான தேரோட்டம் இங்கு நடப்பது சிறப்பு.அந்த வகையில், திருத்தேர் பவனி விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேல்மருவத்துார் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.