பதிவு செய்த நாள்
28
ஜூலை
2017
02:07
வடமதுரை, வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவில் இந்தாண்டு தேர் இழுக்கும் நேரம் காலை நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு துவங்கி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணியளவில் மண்டகபடிதாரர்கள் சார்பிலான சிறப்பு வழிபாடு நடைபெறும். அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.,5ல் திருக்கல்யாணம், ஆக.7ல் தேரோட்டம் நடக்கிறது. வழக்கமாக தேரோட்டம் மாலை நேரத்தில் துவங்கி இரவு 8:00 மணியளவில் நிலைக்கு திரும்பும். இந்தாண்டு சந்திர கிரகணம் ஏற்படுவதால் அன்று(ஆக.7) காலை 9:00 மணிக்கே தேரோட்டம் நடக்கிறது. மற்றொரு முக்கிய விழாவான பெருமாள் சுவாமி இரவு நேரத்தில் வீதியுலா செல்லும் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் ஆக.9ல் நடக்கிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.