மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்ரா பவுர்ணமி நாளில், சிவகங்கை மாவட்ட கிராமங்களில் குல தெய்வங்களை வழிபடும் நடைமுறை இருந்து வருகிறது. அன்றைய தினம், கோயில் திருவிழாக்களும் களை கட்டுகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள கொத்தரி சோலை வளர்த்த அய்யனார் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன புரவி எடுப்புத் திருவிழா? என்று கேட்டபோது, வண்டல் மண், களிமண், மணல், கம்பு பயிரின் உமி போன்ற கலவைகளால் செய்யப்பட்ட புரவி (குதிரை) பொம்மைகளை இந்த சோலையாண்டவர் கோயிலுக்கு மக்கள் எடுத்து வருவார்கள். மழை பெய்ய வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும்; ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுகூடி நடத்தும் திருவிழா இது இன்றிரவு பத்து மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. என்றார்கள் பள்ளத்தூர் வாசிகள். அப்போது ஒருவர், பள்ளத்தூர் கோடியாந்தோப்பு தெருவிலும்கூட இன்று குல தெய்வ வழிபாடு நடக்கிறது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் கருப்பரை வணங்கி வருகிறார்கள் என்றார்.