பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
தமிழ்நாட்டில் உள்ள காவல் தெய்வங்களில் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார் கருப்பசாமி. கிராம கோயில்கள் பலவற்றிலும் கருப்பசாமி இடம் பெற்றிருக்கிறார். தமிழர்களில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். கருப்பசாமி இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சங்கிலிக்கருப்பன், பதினெட்டாம்படியான், ஒண்டி கருப்பசாமி, கோட்டை வாசல் கருப்பசாமி, அச்சன் கோயில் கருப்பசாமி, மடை கருப்பசாமி, ஆகாச கருப்பு என 108 பெயர்களில் தமிழகத்தில் கருப்பசாமியை வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளின் பெயர்களைக்கூட கருப்பசாமி, கருப்பாயி என சூட்டி வருகின்றனர். கி.பி. 1900 என்ற குறிப்போடு, திருநெல்வேலி மியூசியத்தில் கருப்பண்ணசாமி சிலை ஒன்று இருக்கிறது. நின்ற கோலத்தில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு, முழங்காலுக்குக் கீழே வருமளவு இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு காணப்படுகிறார் கருப்பசாமி, அவர் மலையாளிகளைப் போல ஒரு பக்கம் சாய்ந்த கொண்டை உடையவராக இருக்கிறார். கருப்பசாமியின் இந்தத் தோற்றமே அவரை மலையாளக் கருப்பு என்று அடையாளம் காட்டுகிறது. அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி குறித்த வரலாறும் இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.