பதிவு செய்த நாள்
03
ஆக
2017
01:08
அந்தியூர்: அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில், கடந்த ஜூலை, 19ல், பூச்சாட்டப்பட்டு, நேற்று முதல் பூஜை நடந்தது. மடப்பள்ளியில் இருந்து குருநாதசுவாமி, காமாட்சியம்மன், பொருமாள்சுவாமி உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேரில் தனித்தனியாக வைத்து பூஜை செய்யப்பட்டது. பின், மேள தாளங்கள் முழங்க, மூன்று தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்து, வனக்கோவிலுக்கு தூக்கிச் சென்றனர். அப்போது, ஏராளமான பெண்கள் தேர் செல்லும் வழியில் படுத்துக்கொண்டனர். பக்தர்கள் அவர்களைத் தாண்டி தேரை தூக்கிச்சென்றனர். இவ்வாறு செய்வதால் சுவாமி தங்களை தாண்டி செல்வதாகவும், குடும்பத்தில் யாருக்கும் எவ்வித தீங்கும் ஆண்டு முழுவதும் ஏற்படாது என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தேர் வனக்கோவிலுக்கு சென்றதும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானோர் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு முழுவதும் வனக்கோவிலில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று அதிகாலை, மீண்டும் தேர் மடப்பள்ளியை சென்றடைந்தது.