ஏர்வாடி சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2017 11:08
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏர்வாடி தர்காவில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் உட்பட பலர் அடங்கப்பட்டிருக்கிறார்கள். 843ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ் மாலை கடந்த ஜூலை 24 மாலை 6:30 மணிக்கு தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அடிமரம் ஊன்றப்பட்டது. நேற்று மாலை 4:30 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க தர்கா வரை ஊர்வலமாக வந்தனர். குதிரைகள் யானை முன் செல்ல ரத ஊர்வலம் தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. மாலை 6:30 மணிக்கு யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றம் செய்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். வரும் ஆக. 15 அன்று சந்தனக்கூடு விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும் ஆணையாளர் கே.தேவதாஸ், ஆணைய உதவியாளர் எம்.கே.தமிழரசு, ஏர்வாடி தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதார, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.