சபரிமலை: மண்டல சீசனுக்கு சபரிமலை தயாராகிறது. பக்தர்களுக்காக 15 கோடி ரூபாய் செலவில் சன்னிதானத்தில் நவீன மருத்துவமனை கட்டப்படுகிறது. அப்பம் தயாரிப்பு மற்றும் பேக்கிங் இயந்திரமயமாகிறது. சபரிமலையில் மண்டல -மகரவிளக்கு சீசன் நவம்பரில் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சன்னிதானத்தில் 15 கோடி ரூபாயில் மருத்துவமனை கட்டப்படுகிறது. கடந்த மண்டல பூஜை நாளில் மாளிகைப்புறம் கோயில் அருகே நெரிசல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை படுக்க வைக்க இடம் இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தவிர்க்க மூன்று மாடி கட்டடம் கட்டப்படுகிறது.இங்கு நவீன அறுவை சிகிச்சை அறை, ஐ.சி.யூ., எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை நிலையம், மருந்தகம், 50 படுக்கைகளுடன் கூடிய வார்டு என அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. டாக்டர்கள், ஊழியர்கள் தங்கவும் இங்கு வசதி உண்டு. சீசன் தொடங்குவற்கு முன் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முக்கிய வழிபாடு பிரசாதங்களில் ஒன்றான உண்ணியப்பம், ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்படுகிறது. இது முழுவதும் இயந்திர மயமாக்கப்படுகிறது. மேலும் ஒரு புதிய அரவணை தயாரிப்பு இயந்திரமும் நிறுவப்படுகிறது. மாளிகைப்புறம் கோயிலில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், இங்கு புதிதாக நடைப்பந்தல் கட்டப்படுகிறது. மேலும் இங்கிருந்து அன்னதான மண்டபம் செல்லவும் வசதி செய்யப்படுகிறது.