பதிவு செய்த நாள்
04
ஆக
2017
01:08
மேட்டூர்: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, மேட்டூர் காவிரி ஆற்றில், லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், புனித நீராடி வழிபாடு செய்தனர். தென்மேற்கு பருவ மழையால், ஆடி மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், தட்சிணயான புண்ய நதி என்ற பெருமை, காவிரிக்கு உண்டு. தட்சிணயான புண்யகாலம் தொடங்கும் ஆடி மாதத்தில், கரையோர மக்கள் காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்வர்.
பாரத போர் ஆடி, 1ல் தொடங்கி, ஆடி, 18ல் நிறைவுற்றது. அப்போது, பாண்டவர் போர் கருவிகளை காவிரியில் சுத்தம் செய்து, புனித நீராடியதாக புராணம் கூறுகிறது. அதை நினைவு கூறும்வகையில், ஆடி, 18 ஆன நேற்று, பக்தர்கள் தங்கள் குலதெய்வம், காவல் தெய்வங்களின் கத்தி, வேல், சூலாயுதம் போன்றவற்றை, மேட்டூர் காவிரி ஆற்றில் சுத்தம் செய்து, கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். மேலும், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். புதுமண தம்பதியர், மணமாலைகளை நீரில் விட்டு, காவிரி அன்னையை வழிபட்டனர். அணை அடிவாரம், முனியப்பன் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். அணை பூங்காவிலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர். சுமங்கலி பெண்கள், திருமணமான பெண்களுக்கு, புதிதாக தாலிக்கயிறு கட்டிவிட்டனர். சில மூத்த தம்பதியர், சுமங்கலி பெண்களுக்கு புது தட்டு, ஜாக்கெட், வளையல், பூ ஆகியவற்றை கொடுத்து, அவர்களிடம் ஆசிபெற்றனர்.