ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் சாய்பாபா சன்னதி உள்ளது. நேற்று, வியாழக்கிழமை காலை, மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு பக்தர்களால் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.முன்னதாக, பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இரவு நடந்த சிறப்பு பூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில், லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில் அருகே உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.