பதிவு செய்த நாள்
07
ஆக
2017
01:08
தஞ்சாவூர்: தஞ்சை, புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, 7 டன் மலர்களால், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் காவல் தெய்வமாக விளங்கும், புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.
இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், பல்வேறு ஊர்களில் உள்ள பக்தர்களிடம் பெறப்பட்ட, 15 வகையான மலர்களுடன், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் புறப்பட்டன. ரதங்கள் அனைத்தும், நேற்று முன்தினம் இரவு, தஞ்சை பெரிய கோவில் முன் நிறுத்தப்பட்டன. விநாயகர், அம்மன், முருகன் ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு, ரதத்தில் எழுந்தருளி, ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன. தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரதங்கள், நேற்று மதியம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடைந்தன. ரதங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பூக்களை, பக்தர்கள் கூடைகளில் எடுத்து சென்று, அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். மொத்தம், 7 டன் பூக்களால், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.