பதிவு செய்த நாள்
04
செப்
2017
11:09
பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும்,புஷ்கர் சரோவர் என்ற ஏரி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், புஷ்கர் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஏரி, தீர்த்த குரு, ஆதிகுரு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பிரம்மா கோவிலில், கார்த்திகை மாதத்தில், ஐந்து நாட்கள், புஷ்கர் மேளா கொண்டாடப்படும்.
பவுர்ணமி நாளில், நிறைவு பெறும் மேளாவின் போது, ஏராளமான பக்தர்கள் புஷ்கர் சரோவர் ஏரியில் புனித நீராடுவர். ஒவ்வொரு நதியிலும், பிரகஸ்பதியான குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தை புஷ்கரம் எனவும், பஞ்சாங்கங்களில் இதை புஷ்கர காலம் எனவும் குறிப்பிடுகின்றனர். அதே போல், ஒவ்வொரு ராசிக்குரிய நதிகளிலும், குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில், அந்தந்த நதிகளில் புஷ்கரம் நடைபெறும். புஷ்ரத்தின் போது, நதிகளில் மக்கள் புனித நீராடுவர்.
இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி உட்பட, 12 நதிகளிலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் என்ற புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கும். அதன்படி, குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதை ஒட்டி, செப்டம்பர், 12 முதல், 23ம் தேதி வரை, காவிரி தீர்த்தங்களில் புஷ்கரம் நடக்கிறது. குரு பகவான், மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது, காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில், கங்கைக் கரையில் புனித தலங்களில் புஷ்கரம் நடக்கும். ரிஷப ராசியில் பிரவேசிக்கும் போது, நர்மதா நதிக்கரையில் உள்ள ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றான ஓம்காரேஸ்வரர் புனித தலத்திலும், மிதுன ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், சரஸ்வதி நதிக்கரையின் குருஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத்தில் சோமநாதபுரம், அலகாபாத்தில் திரிவேணி சங்கமம், மத்திய பிரதேசத்தில் பேடாகட், ஆந்திராவில் உள்ள காலேஸ்வரம் போன்ற இடங்களில், சரஸ்வதி புஷ்கரம் நடக்கும்.கடக ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், யமுனோத்ரி, ஹரித்துவார், பிருந்தாவன், மதுரா, திருவேணி சங்கமம் போன்ற இடங்களிலும், சிம்ம ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், நாசிக்கில் உள்ள திரியம்பகம், ஆந்திராவில் கோதாவரி நதியில், புனித நீராடும் புஷ்கரம் நடக்கும். கன்னி ராசியில் பிரவேசிக்கும் போது, துளசி, காசரி, கும்பி, சாவித்திரி, போகவதி ஆகியபஞ்ச கங்கா நதிகள், கிருஷ்ணா நதியோடு கலக்கும் பிரயாக் சங்கமத்திலும், ஆந்திராவில் விஜயவாடாவிலும் நடக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட், 12 முதல், 23ம் தேதி வரை, கிருஷ்ணா புஷ்கரம் நடந்தது.
விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் போது, ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான பீமாசங்கரம், பண்டரிபுரம், தமிழகத்தில், தாமிரபரணியில் உள்ள பாணதீர்த்தம், பாபநாசம், திருப்புடைமருதுார், சிந்துபூந்துறை போன்ற இடங்களில், புனித நீராடி வழிபாடு நடத்தப்படும்.
தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திராவிலும், மகர ராசியில், துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரி மந்த்ராலயத்திலும் புஷ்கரம் நடக்கும். கும்ப ராசியில் பிரவேசிக்கும் போது, சிந்து நதிக்கரையின் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள புனித தலங்களிலும், மீன ராசியில் பிரவேசிக்கும் போது, தெலுங்கானாவில் அடிலாபாத்தில் உள்ள காலேஸ்வரத்திலும், கோதாவரியின் உப நதியான ப்ராணஹிதாவிலும் புஷ்கரம் என்ற புனித நீராடும் விழா கொண்டாடப்படுகிறது.
குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதை ஒட்டி, 144 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு செப்டம்பர், 12 துவங்கி, 23ம் தேதி வரை, அதாவது, ஆவணி, 27 முதல் புரட்டாசி, 8 வரை, காவிரி தீர்த்தங்களில் மகா புஷ்கரம் நடக்கிறது.மகா புஷ்கரம் நடைபெறும் காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியமூர்த்திகள் ஒருங்கிணைந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.காவிரியில் மகா புஷ்கரம் நடைபெறும் காலத்தில், கர்நாடகா மாநிலம், குடகு மலையில் உள்ள தலைக்காவிரி, ஸ்ரீரங்கபட்டிணம், பாகமண்டலா, மாண்டியா, சிவசமுத்ரா, தலக்காடு, கனகாபூர், முத்தாதி போன்ற புனித தீர்த்தக் கட்டங்களில், நீராடி வழிபாடு நடத்துவர். தமிழகத்தில், ஒகேனக்கல், மேட்டூர், பவானி, பள்ளிப்பாளையம், கொடுமுடி, பரமத்தி வேலுார், ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் போன்ற தீர்த்தக் கட்டங்களிலும், நீராடி வழிபாடு நடத்துவர்.
புஷ்கர நீராடல் விதி: இந்த மகா புஷ்கர விழா எல்லா ராசிக்காரர்களுக்கும் உகந்தது என்றாலும், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்கரர்கள் விசேஷமான பரிகாரமும்; மேஷம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு குரு மத்திமப் பலன் தருவதால், பொதுவான தான பரிகாரமும் செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்கிறது புஷ்கர தாத்பர்ய நுால்.காகாரோ கலுஷம் ஹந்திவேகாரோ வாஞ்சித ப்ரத:ரீகாரோ மோஷதம் ந்ருணாம்காவேரீத்ய தாரய:வேத வாக்கியமான இந்த வரிகளில், எல்லாவித தோஷங்களும் நீக்கி, விரும்பிய நன்மைகளைக் கிடைக்கச் செய்து, பாவங்கள் அகற்றி மோட்சத்தை அளிக்கக் கூடியது காவிரி நதி ஒன்றே என, உறுதியாகக் கூறப்பட்டு உள்ளது.
66 கோடி தீர்த்தங்கள்: நம் பாரத பூமியில், 250-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடுகின்றன. இருப்பினும், புஷ்கர நீராடல் என்னும் தீர்த்தக் குளியல் நடத்த, 12 நதிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அவற்றுள் காவிரியும் ஒன்று. புஷ்கரம் என்பது குருபகவானுடைய அருளாசியால் நடப்பது. சிவபெருமான், பக்தர்களுக்குத் தலபுண்ணியம்தருவதில் பங்கு பெறுகிறார். மேலும் பிரம்மா, அஷ்ட லட்சுமி தேவிகளும் தொடர்பு கொண்டிருப்பதால், இப்புனித நீராடல், மோட்சத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் கொடுப்பதாக அமைகிறது. காவிரி நதி, 66 கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்டிருப்பதாக புராணங்கள் போற்றுகின்றன.குடகுமலையில் உருவாகும் காவிரி, கர்நாடகா, மைசூரு எல்லையைக் கடந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலோடு சங்கமம் ஆகிறாள்.
துவங்கிய இடத்தில் இருந்து, 765 கி.மீ., பயணப்படுகிற தென்னாட்டு கங்கையாம் காவிரிக்கு, சிம்சா, ஹேமாவதி, அக்ராவதி, லக்ஷ்மண தீர்த்தம், கபினி, பவானி, லோக பவானி, நொய்யல், அமராவதி என்ற பெயர்களில், கிளை நதிகள் வருகின்றன.காவிரி நதியைப் பற்றி நம் தர்மசாஸ்திரம் உயர்வாக, இரண்டு மந்திர வாசகங்களால் கூறுவதைக் கண்டால், இதன் ஸ்நான சக்தி,- புனித நீராடல் பலன் நமக்குப்
புரியும்.த்ரிராத்ரம் ஜான்ஹவீ தோயே ஸப்தராத்ரந்து யாமுனே
ஸத்ய: புநாதி காவேரீ பாபம்
ஆமரணாந்திகம்.
இதன் உட்பொருள்: மூன்று நாட்கள் புனித நீராடினால், கங்கை எல்லா பாவங்களையும் அகற்றும். யமுனை நதி, ஏழு நாட்களில் பாவங்களைக்களையும். ஆனால், காவிரிநதியில் புனித நீராடி விட்டால், வாழ்நாள் முழுவதும்செய்த பாவங்களை உடனே அகற்றிவிடுவாள்.பொதுவாகவே காவிரியின் பெருமையை, இல்லங்களில் நடக்கும் புண்ணியாக வாசனமந்திரத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
தீர்த்தேஸ்மின் சன்னிதிம் குரு
இதில் காவிரி நதி இடம் பெற்றுள்ளதால், பாவங்களைப் போக்குவதற்கு சக்தி படைத்த நதிகளுள் காவிரியும் ஒன்று என அறியலாம்.