பதிவு செய்த நாள்
11
செப்
2017
12:09
திருவொற்றியூர்: திருக்கோட்டம் முருகன்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில், 40 ஆண்டுகள் பழமையான, திருக்கோட்டம் திருமுருகன் கோவில் உள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பாபிஷேகம் நடக்கும். அதன் படி இந்தாண்டு, 10 லட்சம் ரூபாய் செலவில், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், வெள்ளி மற்றும்ச னி கிழமைகளில், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோபூஜை, தன பூஜை, பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி.மேலும், பிரவேசபலி, அங்குபார்ப்பணம், யாகசாலை நிர்மாணம், கலகர்ஷாணம், அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று காலை, யாத்ராதானம் ஸங்கல்பம், யாகசாலை பூஜை ஹோமம், திரவ்யாஹூதி, நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, மஹா பூர்ணாஹூதி, தீபாரதனை ஆகியவை நடைபெற்றன. காலை 10:30 மணிக்கு, கலசம் மற்றும் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த, 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு, ’அரோஹரா’ என, விண்ணதிர முழங்கினர். மாலையில், வள்ளி -தேவசேனை சமேத சுப்ரமண்ய சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் மாடவீதி உலாவுடன் விழா நிறைவுற்றது.