பதிவு செய்த நாள்
18
செப்
2017
11:09
உடுமலை : வான்மழை பொழிந்து வளம் செழிக்க, இரு மரங்களுக்கு திருமணம் செய்த நிகழ்வு, உடுமலையில் நடந்தது. கடந்தாண்டு முழுவதும் வறட்சியின் பிடியால், விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீரின்றி உடுமலை சுற்றுப்பகுதியில் தட்டுப்பாடு ஏற்பட்டது. வருண பகவானின் கருணையால், கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே துாரல் மழையும், சில பகுதிகளில் கண நேரத்தில் மறைந்த கனமழையும் காண முடிந்தது. எனினும், கூடுதல் மழை பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயம் வளம் செழிக்கும், குடிநீர் தட்டுப்பாடு குறையும் என மூனிர் நகர் மக்கள் வித்தியாசமான வேண்டுதல் செய்தனர். அப்பகுதியிலுள்ள வேப்பமரம் அரசமரத்துக்கும் திருமணம் செய்த நிகழ்வு, புதுமையாக இருந்தது. வழக்கமான மழை வேண்டி ஊர் மக்கள் மண் சோறு உண்பது, கால் நடைகளுக்கு திருமணம் என்ற வேண்டுதலிலிருந்து முன்னேறி, இப்போது மரங்களுக்கு மணம் முடித்து வைக்கும் மாற்றத்துக்கு மாறியுள்ளனர். பெண் வீட்டார் சீர்தட்டுகளை கொண்டு செல்வது, மாப்பிள்ளை அழைப்பு என அனைத்து சம்பிரதாயங்களும் நடந்தன. இறுதியில், முனீர் நகர் பொதுமக்கள் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள வேப்பமரத்துக்கும் அரசமரத்துக்கும் திருமணம் நடந்தது. பின்பு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.