பதிவு செய்த நாள்
20
செப்
2017
11:09
பேரூர் : மகாளய அமாவாசை தினமான நேற்று, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மக்கள் வழிபட்டனர். புரட்டாசி மாத பவுர்ணமிமுதல் அமாவாசை வரையிலான, 15 நாட்களும் மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகம். மகாளய பட்சத்தின் கடைசி நாளான மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான நேற்று, அதிகாலை, 5:00 மணி முதலே, பேரூர் நொய்யல் படித்துறையில் மக்கள் திரண்டனர். ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு காய்கனிகள் வைத்து வழிபட்டனர். பின்னர், அரிசி மாவு, சர்க்கரை, தேன், எள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றுடன் நெய் கலந்த பிண்டம் வைத்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதை, பல ஆண்டுக்கு பின், பெருக்கெடுத்தோடிய நொய்யல்
ஆற்றில் விட்டு, தங்களின் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். ஆற்றங்கரையில் தர்ப்பணத்தை முடித்தபின், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நெய் தீபமேற்றி வணங்கினர். பேரூர் கோவிலின் உச்சிகால பூஜையில், மூலவர் பட்டீஸ்வரர், அன்னை பச்சைநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில், முன்னோர்களுக்கு படையலிட்டு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
பசுக்களுடன் கடைகள்!
தர்ப்பண வழிபாடுகளை முடித்துக்கொண்ட பொதுமக்கள் அகத்திக்கீரைகளை பசுக்களுக்கு வழங்குவது வழக்கம். இதனால், ஆற்றங்கரை முழுவதும் பசுக்களுடன் புதிதாக அகத்திக்கீரை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பசுக்களை தேடி அலைய வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லாமல் போனது. இருப்பினும் கூட்டம் அதிகரித்த நேரத்தில், இதனால் நெரிசல் ஏற்பட்டது.