பதிவு செய்த நாள்
28
செப்
2017
05:09
சேலம்: காளிப்பட்டி கந்தசுவாமி கோவிலில் வழங்கப்படும் திருநீறு பிரசாதம், பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளதாக, பக்தர்கள் நம்புகின்றனர். சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்த சுவாமி கோவில், 300 ஆண்டுகளுக்கு முன், லட்சுமண கவுண்டர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர், முருகன் மீது அதீத பக்தி கொண்டு, நடை பயணமாக பழநிக்கு சென்று வழிபட்டு, சித்தி பெற்று வந்து, இப்பகுதி மக்களுக்கு தெய்வ வாக்கு சொல்லி உள்ளார்.அப்போது, தீராத நோய்களை தீர்த்தும், அற்புதங்களை நிகழ்த்தி வந்துள்ளார். அவருக்கு பின், ஏழு தலைமுறைகளாக, அவரது குடும்ப வாரிசுகள், பூசாரிகளாக இருந்து, கோவிலை நிர்வகித்து வருகின்றனர். ஸ்தாபகர் லட்சுமண கவுண்டர் காலத்தில் இருந்து, கோவிலில் கறுப்பு நிறத்தில் வழங்கப்படும் திருநீறு பிரசாதம், மக்கள், கால்நடைக்கு ஏற்பட்ட நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கந்தசுவாமி கோவில் திருநீறு, ‘அருமருந்து’ என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக வழங்கப்படும் திருநீறு பிரசாதம், வெல்லம் காய்ச்ச பயன்படும் கரும்பு சக்கையால் தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும், ‘நடப்பாண்டு, பிரசாத திருநீறு நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்’ எனக் கூறி, ஓராண்டுக்கு முன் வாக்களிப்பர். அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், மற்ற கோவில் திருநீறுகளை போல், பவுடர் போன்று இல்லாமல், கரித்துாள் கலந்த மணல் போல் இருக்கும். திருநீறு மணம் இல்லா விட்டாலும், மகிமையில் சற்றும் குறைந்தது இல்லை. இன்றளவும், திருநீறு சாப்பிட்டால், தீராத நோய் தீர்ந்து விட்டதாக, பக்தர்கள் கந்த சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். பில்லி, சூனியம் போன்ற செய்வினை, கோவில் இடும்பன் சன்னதியில் தயாரித்து கொடுக்கும் விசேஷ மையால் விடுபட்டு உள்ளதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.