பூலோகத்தில் தவம் செய்த மகிஷாசுரன், பிரம்மாவிடம் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் நேரும் என்ற வரத்தைப் பெற்றான். ஆணவத்துடன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனுக்கு முடிவு கட்ட சிவன் தன்னுடைய ஆற்றலை சக்தியாக வெளிப்படுத்தினார். திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் தங்களின் ஆற்றல், ஆயுதங்களை அவளுக்கு வழங்கினர். அவள் துர்க்காதேவியாக சிம்மவாகனத்தில் புறப்பட்டாள்.மகிஷாசுரன் தேவியை எதிர்த்து போரிட்டான். அவளோ திரிசூலத்தை வீசி அவனை வதம் செய்தாள். ஜெயஜெயதேவி துர்காதேவி என தேவலோகமே துர்காதேவியின் வெற்றியைக் கொண்டாடியது. இந்த வெற்றித்திருநாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.