ஒரு இளைஞன் நண்பன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவன் நல்லவன் போல் நடித்து அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றான். ஒரு கட்டத்தில், அவன் வீட்டில் இருந்த பொருளைத் திருடி விட்டு ஓடி விட்டான். இன்னொரு வீட்டில் ஒரு இளைஞன் தன் நண்பனை சமையலறை வரை, அனுமதித்தான். அவனும் நல்லவன் போல நடித்தான். ஒருநாள், வீட்டில் நண்பனின் சகோதரி மட்டும் தனித்திருந்த வேளையில், வீட்டுக்குள் வந்து அவளைக் கெடுத்து விட்டு ஓடிவிட்டான். இவர்களைப் போன்ற நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் (நய வஞ்சகன்) நோன்பு நோற்று தொழுகையில் மும்முரமாக ஈடுபட்டு தான் ஒரு முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டாலும் அவன் வஞ்சகன் தான். அவன் நயவஞ்சகன் தான். ஏனெனில், ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு தன் நாவினாலோ கையாலோ வேதனை தர மாட்டான், என்கிறார் நாயகம். நட்பு என்பது மிக உயர்வான அம்சம். நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நயவஞ்சகம் என்னும் விஷத்தை கலந்து விடக்கூடாது. உங்களைச் சுற்றியும் நயவஞ்சகர்கள் இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு உஷாராக வேண்டியது உங்கள் பொறுப்பும், கடமையும் ஆகும்.