பதிவு செய்த நாள்
20
அக்
2017
02:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று கேலாகலமாக துவங்கியது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலாவும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5 மணிக்கு சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6 மணிக்கு சூரசம்ஹாரமும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 26 ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் மாலை 7 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணமும், 27,28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழாவும், 30 ம் தேதி சுவாமி மீண்டும் மலை கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.