ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை அருகேயுள்ள ஆலங்குளம் பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோயிலில் மழை வேண்டி கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டனர். உத்தரகோசமங்கை அருகேயுள்ளது ஆலங்குளம் கிராமம், இங்கு 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர்.ஆனாலும் கிராமத்தில் ஒற்றுமையாக மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சமத்துவ பொங்கல்: இந்த கிராமத்தில் பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் ஊர் கூடி சமத்துவ பொங்கல் குறித்து முடிவு செய்வார்கள். அன்றைய தினத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களும் கோயில் முன்பு திரண்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கலிட்டு சுவாமிக்கு 9 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. இதில் மக்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். மழைக்காக பிரார்த்தனை: கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதியில் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்தாண்டு கண்டிப்பாக அய்யனார் மழை பொழிய செய்து, விவசாயத்தை காப்பார், என்ற நம்பிக்கையில் நேற்று மாலை சமத்துவ பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கிராம மக்களும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.