பதிவு செய்த நாள்
23
அக்
2017
12:10
ஆர்.கே.பேட்டை : நொச்சிலி, எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 27ம் தேதி காலை நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம், கணபதி பூஜையுடன் துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, நொச்சிலி கிராமத்தின் வடமேற்கு பகுதியில், குளக்கரையில் உள்ளது எல்லையம்மன் கோவில், இந்த கோவில், சீரமைப்பு பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தன. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 27ம் தேதி, வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம், புதன்கிழமை, காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புற்று மண் பூஜை நடக்கிறது.வியாழக்கிறமை காலை, பிம்ப பிரதிஷ்டையும், மாலை, 6:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடக்கின்றன. வெள்ளிக்கிழமை, அதிகாலை, 4:00 மணிக்கு, யாத்ரா தானம், மகா சங்கல்பம் நடைபெறும்.அதை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோபுர உச்சிக்கு புறப்பாடு ஆகின்றன. 6:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகமும், 7:00 மணிக்கு மூலவர் எல்லையயம்மனுக்கு, மகா அபிஷேகமும் நடத்தப்படுகிறது.