பதிவு செய்த நாள்
28
அக்
2017
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆறு தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, புதிய தீர்த்த கிணறு தோண்ட பூமி பூஜை நடந்தது.ராமேஸ்வரம் கோவிலுக்குள் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராட, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நெரிசலை சமாளிக்க, கோவில் நிர்வாகம், மகாலெட்சுமி, காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தம் ஆகிய, ஆறு தீர்த்த கிணறுகள் மூடப்படுவதாக அறிவித்தது. இதனால், பக்தர்கள், 22 தீர்த்தங்களில் நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதை தவிர்க்க, ஆகம விதிப்படி, ஆறு தீர்த்த கிணறுகளை, கோவிலில் வேறு இடத்தில் மாற்றி வைக்க, உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில், இரண்டாம் பிரகாரம் வடக்கு பகுதியில் புதிதாக, ஆறு தீர்த்த கிணறுகள் தோண்ட நேற்று, கோவில் குருக்கள் பூமி பூஜை செய்தனர்.
இது குறித்து, இணை ஆணையர், மங்கையர்கரசி கூறியதாவது: பக்தர்கள் வசதிக்காக, ஆகம விதிப்படி கோவிலில், ஆறு தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, புதிய தீர்த்த கிணறுகள், 12 லட்சம் ரூபாய் செலவில் தோண்டும் பணி துவங்கியது. மேலும், வடக்கு, தெற்கு ராஜகோபுரம், தீர்த்த கிணறுகள் சுற்றி டைல்ஸ் கற்கள் பதிக்கப்படும். இப்பணி, மூன்று மாதங்களுக்குள்முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.