சிங்கம்புணரி, சிங்கம்புணரியில் பழமை வாய்ந்த செட்டியார்குளத்தை சீரமைத்து தெப்ப உற்ஸவம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரின் மையப்பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக்குளம் பழமையானது. இந்தக்குளத்தில் முற்காலத்தில் தெப்ப திருவிழா நடந்தற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் நடுவில் கல்துாண்களால் ஆன மைய மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபம் சிதிலமடைந்தும், பல துாண்கள் கீழே விழுந்தும் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்திருக்கிறது. அதற்கு பிறகு அந்த சிலை காணாமல் போய்விட்டது. இப்பகுதியில் புதிதாக திருமணம் முடித்து வரும் மணமக்கள் இந்த மண்டபத்தை நோக்கி வணங்கிச் செல்வது உண்டு. இந்த குளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் நிலையில் அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதில் தனியார் ஆக்கிரமிப்பும், செடிகளின் ஆக்கிரமிப்பும் அதிகம் உள்ளது. இவற்றை அகற்றி குளத்தை பேரூராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும். இது தவிர இந்தக்குளத்திற்கு மழை தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய் மூடப்பட்டு கிடக்கிறது. குளத்தின் தெற்கு கரையை திறந்தவெளிக்கழிப்பிடமாக அப்பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் குளம் துர்நாற்றம் வீசுகிறது. இந்தக்குளத்தை சீரமைத்து தெப்பத்திருவிழாநடத்த இந்துசமய அறநிலையத்துறை முன்வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இக்குளம் ஊருக்கு பொதுவான குளமாக இருப்பதால் தனியார் உபயத்துடன் யாராவது சீரமைத்தால் தெப்ப திருவிழா நடக்க வாய்ப்புள்ளது. இங்குள்ள பல ஊரணி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, மூடப்பட்டு போய்விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் இது போன்ற குளங்களையாவது பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.