கோயிலுக்கு தயாரிக்கப்படும் ஒரு அரிவாளின் விலை ரூ.25 ஆயிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2017 11:11
திருப்புவனம்: திருப்புவனத்தில் கோயிலுக்கு தயாரிக்கப்படும் ஒரு அரிவாளின் விலை 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் உழவு கருவிகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இதில் அரிவாள் சிறப்புப்பெற்றது. இங்கு சாதாரண அரிவாள் முதல் ராட்சத அரிவாள் வரை தயாரிக்கப்படுகிறது.
திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட அரிவாள் தயாரிப்பு பட்டறைகள் உள்ளன. சேதமடைந்த கனரக வாகனங்களின் இரும்பு பட்டைகளை வாங்கி வந்து நெருப்பில் இட்டு தட்டி தட்டி அரிவாள் தயாரிக்கின்றனர். சாதாரணமாக அரிவாள் தயாரிக்க 2 பேர் தேவைப்படும். நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 அரிவாள் வரை தயாரிக்கலாம். ஆனால் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பில் கூடுதல் நேரம் செலவாகும். தேவையான உயரத்துக்கு எற்ப முதலில் இரும்பு பட்டைகளை இணைக்கின்றனர். அதன்பின் மர கைப்பிடி பொருத்த வேண்டும், பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அரிவாளில் பித்தளை மணிகள் பொருத்தி தருகின்றனர். இந்த அரிவாளின் விலையும் 300 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. மதுரை அழகர்கோயில் 18ம்படி கருப்பண்ணசாமிக்கு நேர்த்திகடனாக பலரும் அரிவாள் தயாரித்து செலுத்துகின்றனர். அய்யனாருக்கு நேர்த்திக்கடனாக செலுத்த ராட்சத அரிவாள் தயாரிப்பு தற்போது நடந்து வருகிறது. 18 அடி உயர ராட்சத அரிவாளின் எடை 180 கிலோ. இதன் விலை ரூ.25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.