பதிவு செய்த நாள்
12
டிச
2011
04:12
ஓம் ஸிம்ஹாரூடாய நம
ஓம் சிங்கத்தின் மீதேறி வருவோய் போற்றி
சிங்க வாஹனம் உடையவன். சிங்கம் தர்ம ஸ்வரூபமானது. பகவானுக்கு சிங்க வாஹனம் உண்டென்பது கீழ்க்கண்ட தியான சுலோகங்களிலிருந்து அறியலாம்.
தசத்வம் த்வகராம்போஜ த்ருத பாச கசாயுதம்
ஸிம்ஹாரூடம் மஹாபீடம் த்யாயேத் ஹரிஹராத்மஜம்
பத்துத் திருத்தலைகளும், பாசம், சாட்டை ஏந்திய இருகைத் தாமரைகளுடனும் சிங்கத்தின் மீதேறி வரும் மஹா பீடத்திலுள்ள ஹரிஹர புத்திரனைத் தியானிக்கிறேன்
ஸிம்ஹாரூடம் த்ரிநேத்ரம் த்ரிதச பரிவ்ருடம் ஸுந்தர ப்ரூவிலாஸம்
ஸ்ரீ பூர்ணா புஷ்கலேசம் ச்ருதி வினுத பதம் சுத்த பஸ்மாங்க ராகம்
சாந்தம் சங்காரி பங்கேருஹ லஸிதகரம் ஸத்சிதானந்த மூர்த்திம்
சாஸ்தாரம் தர்ம பாலம் ஹரிஹர தனயம் சாக்ஷி பூதம் பஜேஹம்
சிங்கத்தின் மீதேறி வருபவரும், முக்கண்களையுடையவரும், முப்பத்துமூன்று(கோடி) தேவர்களால் சூழப்பட்டவரும், அழகிய புருவகாந்தியுடையவரும், பூர்ணா புஷ்கலா மணாளனும், வேதம் துதிக்கும் திருப்பாதங்களையுடையவனும், தூய டெண்ணீறு அணிந்தவனும், சாந்தனும், தாமரையும், அபயமும் விளங்கும் திருக்கரங்களையுடையவனும், ஸச்சிதானந்த மூர்த்தியும்,(மூவுலகும்) ஆள்பவனும், தர்மத்தைக் காப்பவனும், எல்லாவற்றிற்கும் சாக்ஷி பூதமானவனுமாகிய ஹரிஹரதனை பூஜிப்போம்.
ஓம் ஹர்யக்ஷ வாஹனாரூடாய நம
ஓம் வேத ஸாராய நம
ஓம் வேதத்தின் விழுப்பொருளே போற்றி
வேத-வேதத்தின், ஸார-கருப்பொருளாயுள்ளவன்
அனந்தாவை வேத; என்ற வாக்குப்படி கணக்கில்லாமல் இருந்த வேதங்களை, மனிதர்களின் ஞாபகசக்தி குன்றி வருவதையறிந்து, வியாசர் நான்காகத் தொகுத்து வைத்தார். அதிலும், ஒருவன் 12 ஆண்டுகளில் ஒரு வேதத்தின் ஒரு சாகையைத்தான் (பகுதியை) பயில முடியும். ஆனால், ஸர்வ வேத ஸாரமான ஸ்ரீ மஹா சாஸ்தாவின் நாமத்தை ஒரு முறை உச்சரித்தால் போதும், அனைத்து வேதங்களையும் ஓதினதாகும்.
வரத புவனாதார வாசாமகோசர வேத வேதாந்த ஸார விபூதி தர
வேத்ர விபுலாயுத தர ஹரித விமலாம்பர ஸுராஸுர விபூதி கர
ஹரி துரக கஜ விவித வாஹன மனோஜ்ஞ தர
வரம் தருபவனே, உலகிற்கு ஆதாரமானவனே, வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவனே, வேத வேதாந்தங்களின் ஸாரமாக உள்ளவனே! அஷ்டமா ஸித்திகளை அருள்பவனே பிரம்பையும், மற்றும் பல பேராயுதங்களையும் ஏந்தியவனே, தூய பச்சைப் பட்டாடை அணிந்தவனே, தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நலமருள்பவனே சிங்கம், குதிரை, யானை என்று வாஹனங்களை உடையவனே, மனதில் விரும்பியது தருபவனே
ஓம் ப்ரம்ஹ ரஸிகாய நம
ஓம் வேதத்தின் சுவை அனுபவிப்போய் போற்றி
ப்ரம்ஹ-வேதம் ஓதுவதை, ரஸிக-ரசிப்பவன்
ஓம் வேத முகாய நம
ஓம் வேதமோதும் முகமுடையாய் போற்றி
வேத-வேதத்தை ஓதும் அல்லது வேதங்கள் தோன்றிய, முக-முகமுடையவன்
1. இறைவனது முகத்திலிருந்து வேதங்கள் தோன்றின(பார்க்க 688 பஞ்சானனாய) அவை அவனுடைய மூச்சுக் காற்று. யஸ்ய நி: ச்வஸிதம் வேதா: என்பது ஆதி சங்கரர் வாக்கு(ஜீவன் முக்தி விவேகம், முதல் சுலோகம்) இதே கருத்து ப்ரஹதாரண்ய உபநிஷத்திலும்(2-4-10) சொல்லப்பட்டுள்ளது.
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான் பெரியபுராணம், 5-33
மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொற்கழிந்தவனே திருவாசகம், 6-43
2. ஓம் நான்கு முகமுடையாய் போற்றி!
வேத:-பரிபாஷையில்(நான்கு வேதங்களுள்ளதால்) நான்கு என்ற எண்ணைக் குறிக்கும்.