பதிவு செய்த நாள்
23
நவ
2017
12:11
கனகம்மாசத்திரம்:சக்தி அம்மன் கோவில், ஏழாம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி, நேற்று, 108 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில், சக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஏழாம் ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று, 108 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், காலை, 7:00 மணிக்கு, யாகசாலையில், 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, 108 பெண்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து, கோவில் வளாகத்தை அடைந்தனர். காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கனகம்மாசத்திரம், நெடும்பரம், பனப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.