பதிவு செய்த நாள்
29
நவ
2017
05:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா,நவ.23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், முக்கிய விழாவான, மஹா ரத தேரோட்டம் இன்று(நவ.29ல்) நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து, 60 டன் எடை கொண்ட, 63 அடி உயரமுள்ள மஹா ரதத்தில், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், மஹா ரத தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தின் போது, பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு, வடம் பிடித்து இழுத்தனர். டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இதையொட்டி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்களில் நகராட்சி சார்பாக மேற்கொள்ளப்படும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.