பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருவண்ணாமலை: தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. நாளை, 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, 20 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருவிழாவை ஒட்டி, வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர் தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.க்கள், 14 எஸ்.பி.,க்கள், 100 டி.எஸ்.பி.,க்கள்., உள்பட 7,484 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன், 380 தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகம், நகரின் முக்கிய இடங்கள், கிரிவலப்பாதை ஆகிய இடங்களில், மொத்தம், 147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 30ஆயிரம் குற்றவாளிகளின் போட்டோக்களை பதிவேற்றம் செய்து, கணினியின் வழியாக கூட்ட நேரிசலில் குற்றவாளிகள் நடமாடுவதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரை சுற்றி, 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், 35 கண்காணிப்பு கோபுரம் மற்றும் 39 காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. 80 கமாண்டோ படையினர் மலை ஏறும் வழியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தத்தில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.