பழநி: பழநி இடும்பன்மலை அடிவாரத்தை சுற்றி 3 கி.மீ.,துாரத்திற்கு கிரிவலப்பாதை அமைக்கும் திட்டம் ஆய்வுடன் அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது. பழநிமுருகன் மலைக்கோயிலை சக்தி கிரி என்றும் இடும்பன் மலையை சிவகிரி என அழைக்கப்படுகிறது. பழநிக்கு வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கியபின், முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகமாக செல்கின்றனர். இந்த இடும்பன் மலையைச் சுற்றி 3 கி.மீ., அளவுக்கு மலையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது, திடீர் கோயில்கள் வந்துள்ளன. பின்புறத்தில் குப்பை கொட்டுகின்றனர்.
வலதுபுறத்தில் இருந்து ஏற்கனவே மலைகோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது. இடதுபுறத்தில் பை-பாஸ் ரோட்டை இணைத்து புதிதாக கிரிவலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு இணைஆணையர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் இடும்பன்மலை இடதுபுறத்தில் 40அடி அகல கிரிவலப் பாதை அமைக்க இடத்தை பார்வையிட்டனர். கோயில்நிலம்போக உள்ள பகுதியில் புறம்போக்குநிலம், தனியார் நிலம் யார் பெயரில் உள்ளது என ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன்பின் அப்படியே அத்திட்டம் கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிலங்களை கையப்படுத்துவதில் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் பழநிவரும் சுற்றுலா வாகனங்களின் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும். இடும்பன்மலை கிரிவலப்பாதையில் மரங்கள் வளர்த்தால் ரம்யமான சூழல் உருவாகும். மேலும் விழாக்காலங்களில் பழநிமலைக் கோயில் கிரிவீதியில் வரும் கனரக வாகனங்களினால் ஏற்படும் நெரிசல் குறையும். விரைவில் தைப்பூசவிழா வர உள்ளதால் இடும்பன்மலை கிரிவலப்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், தைப்பூசத்திற்குள் இடும்பன் மலைக்கோயில் இடதுபுறத்தில் பாதை அமைக்க, பொறியாளர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.