பதிவு செய்த நாள்
11
டிச
2017
12:12
தர்மபுரி: கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதியமான்கோட்டையில் உள்ள தட்சண காசி கால பைரவர், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சண காசி கால பைரவர் கோவிலில், நேற்று கால பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், தங்க கவச அலங்காரத்தில், காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்காக எலுமிச்சை, தேங்காய், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, காலபைரவரை வழிபட்டனர். இரவு, 10:00 மணிக்கு, குருதி பூஜை, மிளகாய், மிளகு கொண்டு சிறப்பு யாகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது.
* திருவண்ணாமலை, கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம குளம் அருகே உள்ள கால பைரவர் சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் உள்ள கால பைரவர் கோவிலில், காலபைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு, நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. இதில், ?ஹலிகாப்டர் மூலம் கோபுர கலசங்களுக்கு மலர் தூவப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கந்திகுப்பம் பைரவ சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.