சபரிமலையில் புஷ்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2017 01:12
சபரிமலை: சபரிமலையில் ஐயப்பனுக்கும், மாளிகைப்புறத்தம்மனுக்கும் புஷ்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் முக்கியமானது புஷ்பாபிஷேகம். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் ஏழு முதல் ஒன்பது வரையிலும் இந்த பூஜை நடைபெறும். ரோஜா, தெற்றி, துளசி, முல்லை, அரளி, செவந்தி, வில்வஇலை என ஏழு வகை பூக்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும். நெய்யபிஷேகத்துக்கு அடுத்த படியாக ஐயப்பனுக்கு அதிக பக்தர்கள் நடத்தும் வழிபாடு இதுவாகும்.
தேவசம்போர்டு அலுவலகத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்த முடியும். கூடைகளில் நிரப்பும் பூக்களை பக்தர்களே எடுத்து ஸ்ரீகோயில் அருகே கொண்டு சென்று பூஜாரிகளிடம் கொடுத்தால் அவர்கள் அபிஷேகம் செய்வதை பார்த்து வழிபட முடியும். இது முடிந்ததும் பக்தர்களுக்கு பூக்களும், மாலைகளும் பிரசாதமாக வழங்கப்படும். புஷ்பாபிஷேகம் நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நாளுக்கு நாள் புஷ்பாபிஷேகம் நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கும் நீண்ட கியூ காணப்படுகிறது. தமிழ்நாட்டில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது மாளிகைப்புறத்தம்மன் கோயிலும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு தனியாக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.